

தி.மலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 15 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை என வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் தணிகைவேல் குற்றஞ்சாட்டினார்.
தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் அக்கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறும்போது,“தி.மலை சட்டப்பேரவைத் தொகுதி வளர்ச்சிக்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. நான் வெற்றிபெற்றால் திருவண்ணாமலை தொகுதியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவேன்” என்றார். அப்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் ராகவன், மாநில துணைத் தலைவர் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக அவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 16 கால் மண்டபம் முன்பு இருந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.