சேடப்பட்டி முத்தையாவின் மூத்த மகன் அதிமுகவில் இணைந்தார்

சேடப்பட்டி முத்தையாவின் மூத்த மகன் அதிமுகவில் இணைந்தார்
Updated on
1 min read

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகனும், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான மணிமாறன் திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணனும் போட்டியிடுகிறார்.

தற்போது வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் இந்தத் தொகுதியில் பலமுனை போட்டி நிலவுவதால் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுவிப்பு அடைந்துள்ளது.

இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா மூத்த மகனும், திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் வைத்து அமைச்சர் ஆர்பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில், ‘‘எங்கள் குடும்பத்தை வாழவைத்தது மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்கள்தான் எங்களுக்கு அடையாளத்தைத் தந்தவர்கள். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு எனது தந்தையும், சகோதரரும் திமுக எனும் சேற்றில் விழுந்துவிட்டார்கள்.

அதிலிருந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர். திமுகவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்காத காரணத்தினால் தற்போது அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

திருமங்கலம் தொகுதியில் நானும் எனது குடும்பத்தினரும் ஆர்.பி.உதயகுமார் வெற்றிக்காக ஆதரவு திரட்டுவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in