

‘‘நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் எனது கோரிக்கைகளை அதிமுக அரசு கேட்கவில்லை,’’ என திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி பிள்ளையார்பட்டியில் கே.ஆர்.பெரியகருப்பன் தனது பிரச்சாரத்தைத் தெடாங்கினார் .
அவர் என்.வைரவன்பட்டி, சமத்துவபுரம், கும்மங்குடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியதாவது:
நான் நான்காவது முறையாக ஒரே தொகுதியில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறேன். அதிமுக வேட்பாளர் எத்தனை கட்சி மாறியுள்ளார், எத்தனை தொகுதி மாறியுள்ளார் என்பதைக் கேளுங்கள்.
திருப்பத்தூர் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துள்ளேன். மேலும் கடந்த 2 முறை நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் எனது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தது.
இந்த முறை திமுக ஆட்சி வந்தததும் உங்களது குறைகள் அனைத்தும் களையப்படும். பலர் பேர் பல பொய்களை கூறி வாக்கு கேட்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பாஜக அரசு, அதிமுக அரசை கைபாவையாக வைத்து கொண்டு மக்கள் விரோத திட்டங்களை செய்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக ஒன்றியச் செயலாளர்கள் சண்முகவடிவேலு, விராமதி மாணிக்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகனிசெந்தில்குமார், மாணவரணிச் செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யூ, வட்டாரத் தலைவர் மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.