சாலையோர வியாபாரிகளுக்கான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சாலையோர வியாபாரிகளுக்கான சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா?- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும்பாதுகாப்புக்காக கடந்த 2014-ம்ஆண்டு 'சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைபடுத்துதல்' சட்டம்கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், வியாபாரம் செய்யும் இடத்துக்கான உரிமம் வழங்குதல், சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்குதல், வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து முறையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்தல், காப்பீடு திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் இதுவரைமுறையாக அமல்படுத்தப்பட வில்லை எனக்கூறி சாலையோர வியாபாரிகள் குழு சார்பில் அதன்உறுப்பினரான சிங்காரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படாததால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சட்டத்தை அமல்படுத்தும் வரை சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தவோ அல்லது வியாபாரத்துக்கு இடையூறு செய்யவோ கூடாது” என்று கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in