Last Updated : 18 Mar, 2021 10:34 PM

 

Published : 18 Mar 2021 10:34 PM
Last Updated : 18 Mar 2021 10:34 PM

கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ; உங்களை மக்கள் தண்டிப்பார்கள் பழனிசாமி: திருப்பத்தூரில் ஸ்டாலின் பேச்சு

‘‘கடவுள் தண்டிக்கிறாரோ, இல்லையோ மக்கள் பழனிசாமியை தண்டிப்பார்கள்,’’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குணசேகரன், மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பழனிசாமி தோல்வி பயம் காரணமாக ஏதோ உளறி வருகிறார். பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறார். ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை மனதில் வைத்து தான் வாரிசு அரசியல் குறித்து பழனிசாமி பேசி வருகிறார்.

வாரிசு அரசியல் குறித்து பேச அதிமுகவிற்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அவரின் மனைவி ஜானகி முதல்வரானார். எம்ஜிஆர்-உடன் நடித்த ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதா தோழி சசகலா பதவிக்கு வந்தார். அவரின் காலில் விழுந்து கும்பிட்ட பழனிசாமி முதல்வரானார்.

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என்று முதல்வரே பேசி வருகிறார். விசாரணை ஆணையம் திமுகவிற்கா நோட்டீஸ் அனுப்பியது? ஓபிஎஸ்க்கு தான் அனுப்பியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து நாட்டுக்கு தெரிவிப்போம்.

எப்படி 13 வயதில் இந்தியை எதிர்த்து கலைஞர் அரசியலில் ஈடுபட்டாரோ, அவரின் வழியில் 14 வயதில் இருந்தே நான் அரசியலில் படிப்படியாக வளர்ந்தவன்.

நெருக்கடி நிலையில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்த வினாடியே என்னை கைது செய்ய போலீஸார் வீட்டிற்கு வந்தனர். தலைவர் என்னை சிறைக்கு வாழ்த்தி வழி அனுப்பினார்.

என்னை கடவுள் தண்டிப்பார் என பழனிசாமி கூறியுள்ளார். நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. என்னை கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாவங்களை செய்தது எல்லாம் நீங்கள். கடவுள் தண்டிக்கிறாரோ, இல்லையோ மக்கள் உங்களை தண்டிப்பார்கள்.

பொள்ளாச்சியில் 250 பெண்கள் பலாத்காரம், தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.

கடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்கள் முன்னேற்றத்திற்கான அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. நிறைவேற்ற முடியும் திட்டங்களை தான் அதில் கூறியுள்ளோம்.

காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிவகங்கையில் வேளாண் கல்லூரி தொடங்கப்படும். தேவகோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப்படும்.

கரோனா 2-வது அலை வருகிறது என்கிறார்கள். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x