கரோனா கட்டுக்குள் வராத வரையில் கிராம சபை கூட்டம் நடத்துவது சரியல்ல: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

கரோனா கட்டுக்குள் வராத வரையில் கிராம சபை கூட்டம் நடத்துவது சரியல்ல: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்
Updated on
1 min read

கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மற்றும் அக்டோபர் 2-ம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக்கோரியும் திமுக தரப்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.

இதையடுத்து, கே.என்.நேரு மற்றும் ஏ.ஜி.மவுரியா தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in