ரூ.190 கோடியில் ரூ.6 கோடி மட்டுமே செலவு; நிர்பயா நிதியை ஏன் முழுமையாகப் பயன்படுத்தவில்லை?- முழு விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு   

ரூ.190 கோடியில் ரூ.6 கோடி மட்டுமே செலவு; நிர்பயா நிதியை ஏன் முழுமையாகப் பயன்படுத்தவில்லை?- முழு விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு   
Updated on
1 min read

மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியம் தமிழகத்துக்கு அளித்த ரூ.190 கோடியில் ரூ.6 கோடி மட்டுமே பயன்படுத்தியதாகப் புகார் எழுந்த வழக்கில், நிர்பயா நிதியை ஏன் முழுமையாகப் பயன்படுத்தவில்லை? என்பது குறித்து பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது.

இந்த நிதியத்திற்கு, ஆரம்பக் கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது. நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாயில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளதாகவும், மீதத் தொகையை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறி, இந்த நிதியை, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்டக் குழு அமைக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு, இருப்பில் உள்ள நிதி எவ்வளவு? அந்தத் தொகை எப்படிச் செலவிடப்பட்டது? நிர்பயா நிதி ஏன் முழுமையாகப் பயன்படுத்தவில்லை? என்பன குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in