Last Updated : 18 Mar, 2021 05:28 PM

 

Published : 18 Mar 2021 05:28 PM
Last Updated : 18 Mar 2021 05:28 PM

திருச்சிக்குப் பெருமை தேடித்தந்த துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரி: நாட்டிலேயே சிறந்த பாதுகாப்பு அதிகாரிக்கான விருதினைப் பெற்றார்

நாட்டிலுள்ள படைக்கலத் தொழிற்சாலைகளில் சிறந்த பாதுகாப்பு அதிகாரிக்கான விருது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரியான கார்த்திகேஷ் காசிநாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிறந்து விளங்கும் நபருக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் படைக்கலத் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சிறந்த பாதுகாப்பு அதிகாரி விருது வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டின் சிறந்த பாதுகாப்பு அதிகாரிக்கான விருதுக்கு திருச்சி படைக்கல (துப்பாக்கி) தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் காசிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதுமைகளைப் புகுத்தியமைக்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற படைக்கல தின விழாவில், தொழிற்சாலையின் பொதுமேலாளர் சஞ்சய் திவேதியிடமிருந்து கார்த்திகேஷ் காசிநாத் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் தற்போதுதான் முதல் முறையாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிக்கு இவ்விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கார்த்திகேஷ் காசிநாத், கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர். இவரது 20 ஆண்டு பணிக்காலத்தில் 4-முறை ராணுவத்தின் மெச்சத்தக்க பணிக்கான விருது பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான துணிச்சல்மிகு விருது பெற்றுள்ளார். மேலும், கருப்பு பூனைப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார். அதேபோல ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் சார்பில் லெபனான் மற்றும் சிரியா நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x