Last Updated : 18 Mar, 2021 01:18 PM

 

Published : 18 Mar 2021 01:18 PM
Last Updated : 18 Mar 2021 01:18 PM

விருத்தாச்சலம் எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த தொகுதி: வேட்புமனுத் தாக்கல் செய்தபின் பிரேமலதா பேட்டி

விருத்தாச்சலம் தொகுதி எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த தொகுதி என அந்தத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விருத்தாச்சலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு பிரேமலதா செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அமமுக- தேமுதிக கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா, தனது சகோதரர் சுதீஷுடன் இன்று விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமாரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்தபின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''2006-ல் விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவு தந்து அவரைச் சட்டப்பேரவை உறுப்பினராக்கியது இந்தத் தொகுதி மக்கள்தான். எனவே எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்தது இத்தொகுதி. அதனால் விருத்தாச்சலம் தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிட்டும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகத் தேர்தலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். தற்போது முதல் முறையாகத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறேன். மேலும், வாக்குப் பதிவுக்கான காலம் மிகக் குறுகிய காலமாக இருப்பதால் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இயலாது. விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். எனது முழுக் கவனமும் விருத்தாச்சலம் தொகுதியில்தான் இருக்கும்.

விருத்தாச்சலம் தொகுதியில் 2006-ல் விஜயகாந்த் போட்டியிட்டபோது கொடுத்த வாக்குறுதிகளைப் பெருமளவு நிறைவேற்றியிருக்கிறார். இருப்பினும் சில குறைகளை நான் சரி செய்வேன். அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பதைக் காட்டிலும் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை வழங்கலாம். அதைத்தான் விஜயகாந்த் வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக பலம் வாய்ந்த கட்சியாகத்தான் இருந்து வருகிறது'' என்று பிரேமலதா தெரிவித்தார்.

முன்னதாக, விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிரேமலதா, அதைத் தொடர்ந்து கொளஞ்சிப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, அங்கு தனது கோரிக்கை நிறைவேற பிராது கட்டி வழிபாடு நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x