

தமிழகத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிவாரணப் பணிகள், விடுமுறை அறிவிப்பு என்று பல தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் அவரவர் பகுதி நிலவரங்களும், வானிலை குறித்த முன்னறிவிப்புகளும் பகிரப்படுகிறது.
இந்நிலையில், சிலர் வானிலை குறித்த தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
தம் நண்பர்களால் பகிரப்படுவதாலும், தான் அறிந்த ஒன்றை மற்றவருக்கும் பகிர வேண்டும் என்ற ஆர்வத்தாலும், தகவலின் நம்பகத்தன்மை பற்றி யோசிக்காமல், மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்துவிடுகின்றனர். இது மக்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், பயத்தையும் உருவாக்கக் கூடும்.
எல்லோருமே செய்திகளும், தகவல்களும் உண்மையானதுதானா என்று சரிபார்த்து பகிர்வதில்லை. ஆனால், இனியும் இப்படி இருக்க வேண்டாமே!
தேவையான செய்திகளை அதிகாரபூர்வமான ஆதார தளங்களில் இருந்து அறிந்துகொண்டு பகிர்வதே ஆரோக்கியமான செயல்பாடாக இருக்கும்.
மழை எச்சரிக்கையைப் பொறுத்தவரை என்ன செய்யலாம்?
வானிலை முன்னறிவிப்பு குறித்த நம்பகமான தகவல்களை >http://imdgov.in என்ற வலைதளம் அல்லது நம் செய்தித்தளமான >tamil.thehindu.com-ல் படித்து தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக, தமிழகத்தில் அன்றைய தினத்தின் வானிலை முன்னறிவிப்பை >http://www.imdchennai.gov.in/Tamil_local.htm என்ற அதிகாரபூர்வ சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளப் பக்கத்தில் காணலாம்.
சென்னை வானிலை முன்னறிவிப்பை >http://www.imdchennai.gov.in/Tamil_local.htm என்ற பக்கத்தில் காணலாம். இவை இரண்டிலும் நாள்தோறும் தமிழிலேயே அறிவிப்பு வெளியிடப்படுவது கவனிக்கத்தக்கது.
அதிகாரபூர்வமான அறிவிப்புகளை மட்டுமே பகிர்வோம். அன்பையும் நம்பிக்கையையும் விதைப்போம்.