Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
நில அபகரிப்பு தொடர்பாக தொடர் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நில அபகரிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ராஜா ஐசக் சாமுவேல். தற்போது தாம்பரம் இரும்புலியூரில் வசிக்கிறார். இவருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள காலி இடம் பெருங்களத்தூர், மகேஷ் நகரில் உள்ளது. இந்த இடத்தை சிலர் போலி ஆவணம் மூலமும், ஆள் மாறாட்டம் மூலமும் அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பெருங்களத்தூர், சீனிவாச நகரைச் சேர்ந்த பார்த்திபன், அவரது சகோதரர் புஷ்பராஜ் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில், ‘நில மோசடி மற்றும் அபகரிப்பு தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, இதுபோல் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT