Last Updated : 17 Mar, 2021 08:29 PM

 

Published : 17 Mar 2021 08:29 PM
Last Updated : 17 Mar 2021 08:29 PM

ஆன்லைன் மணல் விற்பனையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

ஆன்லைன் மணல் விற்பனையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மணல் இணையதளத்தில் பொதுமக்கள் நுழைவு மற்றும் லாரி உரிமையாளர்கள் நுழைவு என 2 நுழைவுகள் உள்ளன.

வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் நுழைவு வழியாக மணலுக்கு முன்பதிவு செய்ய செய்யலாம். பல நேரங்களில் இணையதளத்தில் பொதுமக்கள் நுழைவு திறப்பதில்லை. அப்படியே இணையதளத்திற்குள் நுழைந்தாலும் மணல் முன்பதிவு முடிந்து விட்டதாக வருகிறது.

இதனால் பொதுமக்கள் மணல் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்களுக்கு மணல் சுலபமாக கிடைக்கிறது.

அவர்கள் அரசிடம் ரூ.6500க்கு மணல் வாங்கி ரூ. 40,000-க்கு விற்பனை செய்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு வழியாக குறைந்த விலைக்கு மணல் விற்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ஆற்று மணலை லாரி உரிமையாளர்கள் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஆன்லைன் மணல் விற்பனையில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மீதமுள்ள மணலை லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x