Published : 17 Mar 2021 07:15 PM
Last Updated : 17 Mar 2021 07:15 PM

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிப்பது தேர்தலில் ரகசியத்தை பாதிக்கும்.

அரசியல் சாசனத்தின்படி, தேர்தல் வாக்களிப்பில் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் குறித்து இதில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்குச் செல்லும் போதுதான் அடையாளம் காண முடியும். முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை” என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான ஊகத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது விருப்பத் தேர்வுதான் என்றும் வாதிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தாலே போதுமானது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க அவசியமில்லை” என வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தபால் வாக்கு செலுத்த அனுமதி அளித்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x