

சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஜி.பாஸ் கரனை முதல்வர் பழனிசாமி சமாதானப்படுத்தினார். இதையடுத்து சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு பிரச்சாரம் செய்ய அமைச்சரின் ஆதர வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை தொகுதியில் தனக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓராண் டுக்கு முன்பே அமைச்சர் ஜி.பாஸ்கரன் தேர்தல் பணிகளைத் தொடங்கினார். ஆனால், அவருக்கு திடீரென சீட் மறுக்கப்பட்டு, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்றக்கோரி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்டதோடு, தீக்குளிக்கவும் முயன்றனர். மேலும் மார்ச் 12-ம் தேதி சிவகங்கை வந்த அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனை அமைச்சரின் ஆதரவாளர்கள் வரவேற்க வரவில்லை.
மேலும் சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் அமைச்சரின் மகன் கருணாகரனும் வரவேற்பு நிகழ்ச்சியைத் தவிர்த்தார். இந்நிலையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனை சேலத்துக்கு அழைத்து முதல்வர் பழனிசாமி சமாதானம் செய்தார்.
மேலும் தேர்தல் முடிந்ததும் கட்சியில் முக்கியப் பதவி வழங்குவதாக உறுதி அளித்தார். இதனால் சமரசம் அடைந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் சிவகங்கையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மகனும், ஒன்றியச் செயலாளருமான கருணாகரன் பங்கேற்று பேசினார்.