ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்
Updated on
1 min read

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூதங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா பிப்.22-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் மார்ச் 11-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல் தினந்தோறும் சுவாமி, அம்பாள் காலையில் புறப்பாடு, மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்துக்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் தெருவடைச்சானில் வீதியுலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கென நேற்று அதிகாலை ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந் தருளினர். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8.05 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. மாலை 3.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in