Published : 16 Mar 2021 08:13 PM
Last Updated : 16 Mar 2021 08:13 PM

தமிழகத்தில் ஏப்.6-ல் பொது விடுமுறை: அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அரசாணை

என்.சன்னாசி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம், பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நேற்று தொழிலாளர் நல ஆணையர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

அதில், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135பி-யின்அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்டநிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்.6-ம் தேதி, அவர்கள் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடியவிடுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலையும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையும் கருத்தில் கொண்டு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை வழங்குவதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என அரசியல் கட்சிகளும் விடுமுறைக்கு பரிந்துரைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x