Last Updated : 16 Mar, 2021 01:35 PM

 

Published : 16 Mar 2021 01:35 PM
Last Updated : 16 Mar 2021 01:35 PM

விவசாயிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த முதல்வர், கடன் தள்ளுபடி அறிவிப்பது ஏன்?- முத்தரசன் கேள்வி

தஞ்சாவூர்

விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளுக்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வதாகக் கூறி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று தஞ்சாவூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

''தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை அரசியல் போராட்டக் களமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாகவே அமைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான் செய்யாத திட்டங்களை எல்லாம் இப்போது செய்வதாக வாக்குறுதி அளித்து வருகிறார். விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளுக்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர் தற்போது கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வதாகக் கூறி வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கூறியதில்லை ஆனால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிபிஐ விசாரிக்க வேண்டுமெனக் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது அதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு மு.க. ஸ்டாலின்தான் காரணம் எனக் கூறி பிரச்சினையைத் திசைதிருப்பப் பார்க்கிறார் பழனிசாமி. தன்னுடைய பதவிக்கு ஏற்றவாறு கருத்துக்களை முதல்வர் பேச வேண்டும், கூற வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் பேசும் முறைகளும் விமர்சனங்களும் அரசியலுக்கு உகந்ததாக இல்லை, எனவேதான் இந்தத் தேர்தலை அரசியல் போராட்டம் நிறைந்த தேர்தலாகப் பார்க்கிறோம் .

அதிமுக, தமிழகத்தில் தன்னுடைய பலம், தேர்தல் அறிக்கை, கூட்டணி பலம் ஆகியவற்றை நம்பி இல்லை. பணத்தின் மூலமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற பகல் கனவில் அதிமுகவினர் இருக்கின்றனர். அதைத் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

பணம் கொடுப்பதற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள் அந்தப் பணம் கீழ் மட்டம் வரை சென்று விட்டது. அதற்கு உதாரணம்தான் வேளாண் துறை அமைச்சர் இறந்த போது நடைபெற்ற சம்பவங்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்னும் அதிமுகவின் கனவு பகல் கனவாகத்தான் போகும்''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x