Last Updated : 16 Mar, 2021 03:13 AM

 

Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் சேர்ந்தது எப்படி? :

மதுரை திருப்பரங்குன்றத்தில் மீண்டும் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், பாஜகவில் சேர்ந்த உடனே வேட்பாளரானது எப்படி என்ற ருசிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர் டாக்டர் பா.சரவணன். இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், அந்த தொகுதியை கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இதையடுத்து மதுரை வடக்கு அல்லது திருமங்கலம் தொகுதியைத் தனக்கு ஒதுக்கும்படி கோரினார். ஆனால், அங்கும் அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்தார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் மதுரை வடக்குத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினரும், அரசு ஊழியர்களும் அதிகளவில் உள்ளனர். இங்கு பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன் போட்டியிடுவதாக இருந்தது. இவர் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதி திமுக வேட்பாளர் தளபதி, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.

இதனால் தளபதிக்கு எதிராக தொகுதியில் அதிகளவில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக பாஜக கருதியது. இதைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவரும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மகா.சுசீந்திரனை, மதுரை வடக்கில் நிறுத்த பரிசீலித்தனர். ஆனால், பணபலத்தில் தளபதிக்கு மகா.சுசீந்திரன் ஈடுகொடுப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அச்சமூகத்தில் பண பலமிக்க நபர்களை தேடத் தொடங்கினர். அந்த நேரத்தில் திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தார் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன். அவரை பாஜகவினர் அணுகினர். அவர் ஏற்கெனவே பாஜகவில் மாநிலப் பொறுப்பில் இருந்துள்ளார். இதனால் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட சீட் தந்தால், பாஜகவில் இணைவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக மேலிடத் தலைவர்கள் மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருந்த அக்கட்சி மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீனிவாசனிடம் பேசி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், டாக்டர் சரவணன் இரவோடு இரவாக சென்னை வரவழைக்கப்பட்டு, அவர் பாஜகவில் சேரும் நிகழ்வுநடந்தது. அடுத்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

சென்னையிலிருந்து நேற்று மதுரை திரும்பிய டாக்டர் சரவணன், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை சந்தித்து பிரச்சாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x