Published : 15 Mar 2021 07:49 PM
Last Updated : 15 Mar 2021 07:49 PM

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை இடமாற்றம் செய்யும் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென விதிகள் உள்ளன. ஆனால், அவ்வாறு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வேளாண் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யவில்லை என்றும், அவர்கள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையத்திடம் ஜனவரி 15-ல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x