நல்லநேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்த திராவிடக் கட்சிகள்; மாட்டுவண்டியில் வந்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்- விருதுநகரில் இன்று 16 பேர் மனுத்தாக்கல்

நல்லநேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்த திராவிடக் கட்சிகள்; மாட்டுவண்டியில் வந்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்- விருதுநகரில் இன்று 16 பேர் மனுத்தாக்கல்
Updated on
2 min read

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்பும் திராவிடக் கட்சி வேட்பாளர்கள் இன்று நல்லநேரம் பார்த்து மனுத்தாக்கல் செய்தனர்.

இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை எமகண்டம் என்பதால் 12.30 மணிக்கு மேல் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

விருதுநகரில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் இரு சுயேட்சைகள் உள்பட அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 16 பேர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அஹிம்சா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று பிற்பகலில் நல்லநேரம் பார்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உமா மற்றும் சுயேட்சை வேட்பாளர் பொன்.முனியசாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திமுக வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான தங்கம்தென்னரசு, மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராஜசேகர் ஆகியோர் வேட்புனுத் தாக்கல் செய்தனர்.

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அமமுக வேட்பாளர் ராஜவர்மன், அதிமுக வேட்பாளரும் மாவட்டச் செயலருமான ரவிச்சந்திரனும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மான்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஆகியோரும் வேட்புனுத் தாக்கல் செய்தனர்.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனகபிரியா திருத்தங்கலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தேச மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் விக்ரமன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் வேலுச்சாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in