வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மேலும் 2 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக மேலும் 2 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
Updated on
1 min read

வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த மனோகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிப். 28-ல் சட்டம் நிறைவேற்றியது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான மொத்தமுள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், 68 சமூகங்கள் கொண்ட சீர் மரபினருக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 40 சமூகத்தினருக்கு மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காதநிலை ஏற்பட்டுள்ளது.

முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு

வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கைக்காக மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது போன்ற வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இவ்விரு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே, இதே கோரிக்கைக்காக தமிழக சமூக நீதி பேரவை பொறுப்பாளர் சின்னான்டி, தூத்துக்குடியை சேர்ந்த ராதாராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in