Published : 15 Mar 2021 10:59 AM
Last Updated : 15 Mar 2021 10:59 AM

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்: ஸ்டாலின் பேச்சு 

சென்னை

187 தொகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று பெட்டியில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 47 தொகுதிகளிலும் வாங்குகிறோம். ஆட்சி அமைந்த 100 நாளில் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாகப் பயன்பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என ஸ்டாலின் பேசினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் சீலிடப்பட்டு நேற்று அறிவாலயத்துக்கு வந்தன.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கும் நம்முடைய தலைவர் வாழ்ந்த கோபாலபுர இல்லத்தின் வாசலில், நான் ஒரு சபதம் ஏற்றேன்.

சபதம் மட்டுமல்ல; ஒரு உறுதிமொழியையும் நான் ஏற்றுக்கொண்டேன். தமிழகத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சினைகளை, நாம் ஆட்சிப் பொறுப்பேற்று, அடுத்த 100 நாட்களில் அந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை, சாலை வசதிகள், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை அதேபோல, பேருந்து வசதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இதுபோன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவைக்க வேண்டும்.

அதுவும் நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அந்தத் திட்டத்திற்கான பயணத்தைத் தொடங்கினேன்.

கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அறிவித்து, 29ஆம் தேதி திருவண்ணாமலையில்தான் அந்தப் பயணத்தை நான் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து 187 தொகுதிகளில் என்னுடைய சுற்றுப் பயணத்தை நான் நடத்தி இருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்றுதான் முடிவு செய்து அந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.

ஆனால், எதிர்பாராதவிதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தப் பயணத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது. அதை எல்லாம் கொஞ்சம் ஒத்திவைக்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேன். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியும்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, அதற்குப் பிறகு அவர்கள் தொகுதிப் பங்கீடுகள், அதைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல், அதற்குப் பிறகு வேட்பாளர்களின் தேர்வு இவையெல்லாம் நடந்துள்ளன.

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம் அல்லவா, அந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் முழுமையாக நாங்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இருந்ததால் அதற்குத் தடை ஏற்பட்டது.

அதனால் அந்தப் பயணத்தை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை; அதைத் தொடர முடியவில்லை. எனவே, 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் நான் வலம் வந்திருக்கிறேன். இன்னும் மீதம் இருப்பது 47 தொகுதிகள்தான்.

அந்தத் தொகுதிகளில் மனுக்களை நேரடியாகச் சென்று என்னால் பெற முடியவில்லை. ஆனால், அந்த 47 தொகுதிகளில் நான் செல்லாமலேயே மனுக்களை வாங்கும் பணி தொடங்கியிருக்கிறது. விரைவில் அறிவாலயத்திற்கு அந்தப் பெட்டிகள் வந்து சேர இருக்கின்றன.

நான் மக்களிடம் இருந்து வாங்கியிருக்கும் மனுக்களைப் பொறுத்தவரையில், இப்போது நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் அது அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மனுக்கள் என்று கருதாதீர்கள், மக்களின் இதயங்களாக அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலையில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி, சென்னையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் அந்தப் பயணத்தை நடத்தியிருக்கிறோம். 32 மாவட்டங்களில் இருக்கும் 187 தொகுதிகளில் மக்களைச் சந்தித்து இருக்கிறோம். 38 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பெறப்பட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

லட்சக்கணக்கான மக்களுடைய அந்தக் கோரிக்கைகள், அந்த வேண்டுகோள்கள், அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இங்கே இந்தப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருக்கிறது. எனவே, ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அடுத்த நாள் இந்தப் பெட்டிகள் எல்லாம் திறக்கப்படும். திறக்கப்பட்டு தமிழக மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே ஊடகங்களின் வாயிலாக - இப்போது மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மனுக்களைத் தந்திருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் அந்த உறுதிமொழியை - இந்த நிகழ்ச்சி மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் அந்தந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், இன்றைக்கு இருக்கும் முதல்வர் 10 ஆண்டுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி, நிறைவேற்றவில்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சாதாரணப் பிரச்சினைகள்தான்.

இந்தப் பிரச்சினைகளுக்கு ஏதோ பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், திட்டம் தீட்ட வேண்டும், மத்திய அரசின் அனுமதி வாங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இது எல்லாம் அடிப்படைப் பிரச்சினைகள். இது எல்லாம் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகள். இதைக்கூடத் தீர்த்து வைக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இந்த மனுக்களை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். தலைவர் அடிக்கடி சொல்வார், “சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்” என்று, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும் “சொன்னதைச் செய்வேன் செய்வதைத்தான் சொல்வான்” அந்த வழி நின்று நிச்சயமாக 100 நாட்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எப்படி இதைச் செய்யமுடியும் - நிறைவேற்ற முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதற்கென்று ஒரு தனித் துறை உருவாக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூட அதை நாங்கள் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறோம்.

மாவட்ட ரீதியாகப் பிரித்து, அதைப் பரிசீலித்து, தொகுதி வாரியாக - ஊராட்சி வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு இவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதற்கென்று நியமிக்கப்படும் துறை, அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.

இதை முடித்துவிட்டு, இதெல்லாம் முடித்துவிட்டோம் என்று 100 நாட்களுக்குள் எங்களிடத்தில் வந்து சொல்ல வேண்டும். எனவே, அதிமுக செய்த தவறுகளை, திமுக ஆட்சி சரிசெய்யும் என்ற நம்பிக்கையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முடிவடைகிறபோது, நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாகப் பயன்பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.

தேர்தல் அறிக்கையில் 120-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் தொடங்கப்படும் என்று. நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த அமைச்சகம் இந்தத் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை மட்டுமல்ல, 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் முழுமையாக ஈடுபடும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக்கொண்டு 100-வது நாள் அன்று முதல்வராக இதேபோல உங்களையெல்லாம் சந்தித்து இது தொடர்பான செய்திகளை எல்லாம் நிச்சயமாக உங்களிடத்தில் வெளியிடுவேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

நாளைய தினம் (இன்று) வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு நேராகத் தலைவர் பிறந்த திருவாரூருக்குத்தான் செல்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். அவருடைய அந்த திருவாரூர் தொகுதியில் இருந்துதான் என்னுடைய பிரச்சாரப் பயணம் தொடங்கப்படவிருக்கிறது''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x