Published : 15 Mar 2021 10:33 AM
Last Updated : 15 Mar 2021 10:33 AM

கமல் போட்டியிட்டாலும் பின்னடைவு இல்லை; கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்குதான்: வானதி சீனிவாசன் பேட்டி

கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்குதான். சட்டப்பேரவையில் இரட்டை இலக்கத்தில் நுழைவோம் என அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:

''கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்குதான். சட்டப்பேரவையில் இரட்டை இலக்கத்தில் நுழைவோம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் திரை பிரபலம், மக்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் என்பதெல்லாம் எனக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் கடந்த 5 வருடங்களாக நான் மக்களுடன் நெருங்கிப் பணியாற்றியிருக்கிறேன்.

மக்களின் குரலைக் கேட்பவராக, அவர்களின் துயரத்தில் தோள் கொடுப்பவராக இருந்திருக்கிறேன். அதனால், கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்குதான். தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும். பிரபலங்கள் எல்லோரும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றிருந்தால் தேர்தலில் திரை நட்சத்திரங்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும்''.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி என்னவென்பதை விளக்க எனக்குத் தனியாக அரை மணி நேரம் கிடைத்தால் போராட்டத்தின் பின்புலத்தை வெளிப்படுத்துவேன். விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை அறிவித்தது பாஜகதான். அதனால், தமிழகத்திலும் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இங்கே எழும் ஓரிரு எதிர்ப்பும் தூண்டிவிடப்படும் எதிர்ப்பு. தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம். திமுக ஆட்சியில் பேச்சளவில் இருந்த எய்ம்ஸ் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. அதில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கமளித்து வருகிறது. இன்னும் பல நன்மைகளைச் செய்துள்ளோம்" என்றார்.

எம்எல்ஏக்கள் கட்சி மாறுதலுக்கு பாஜக காரணம் இல்லை:

"எம்எல்ஏக்கள் கட்சி மாறுதலுக்கு பாஜகவே காரணம் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை. கட்சியிலிருந்து விலகுபவர்கள் பாஜகவுக்கும் வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு எந்தக் கட்சியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. அதனாலேயே குஷ்பு, கு.க.செல்வம் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அதேபோல் பாஜக மொழி ரீதியாக அரசியல் செய்வதாகக் கூறப்படுவதும் தவறானது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. தேசியக் கட்சியின் அறிவிப்பு வேறு எந்த மொழியில் இருக்க முடியும். மொழி பேதம் பார்த்திருந்தால், இந்தி தெரியாத என்னை எப்படி தேசிய மகளிரணித் தலைவராக நியமித்திருப்பார்கள்" என்று கூறினார்.

''அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக, சமக போன்ற கட்சிகள் விலகியதால் கூட்டணியின் பலம் குறைந்துவிடாது. அதேபோல் சசிகலா, ஒருதாய் பிள்ளைகளாக நின்று ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பது அதிமுகவுக்கே பலம் சேர்க்கும்'' என்று வானதி தெரிவித்தார்.

ரூ,1000, ரூ.1500 உதவித்தொகையை எதிர்க்கவில்லை:

மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுகவும், இல்லத்தரசிகளுக்கு ரூ.1500 வழங்கப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளதை தான் எதிர்க்கவில்லை எனக் கூறியுள்ள வானதி சீனிவாசன், இவற்றைத் தாண்டி பெண்கள் சுயமாக, சுதந்திரமாக இயங்கும் திட்டங்களை கட்சிகள் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x