

சென்னையில் புதியதாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ள வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே உள்ள ரயில் நிலையங்களுக்கு சிறிய பேருந்துகளை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 தடங்களில் மொத்தம் 54 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகருக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மொத்தம் 9 கிமீ தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 7 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வடசென்னை போக்குவரத்து நெரிசல் பகுதி என்பதால், போதிய அளவில் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ``வடசென்னை பகுதியில் தொடங்கியுள்ள வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் இணைப்பு வசதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெயில் காலம் தொடங்கியுள்ளதால், மக்கள் ஆர்வமாக பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு இணைப்பு வாகன வசதிகள் இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் போதிய அளவில் சிறிய பேருந்துகளை இயக்க வேண்டும். இதற்கான காலஅட்டவணையும் அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் போதிய அளவில் சிறிய பேருந்துகளை இயக்க வேண்டும்.