Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

நாகராஜன் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் வழங்கியதற்கு எதிர்ப்பு: திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்

மானாமதுரையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.நாகராஜன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றியக் கவுன்சிலர் வே.முருகன் திமுகவில் இணைந்தார்.

மானாமதுரை (தனி) தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எஸ்.நாகராஜன் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலிலும் அவருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இளையான்குடி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் வே.முருகன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இவரும், இவரது மனைவியும் பெரும்பச்சேரி ஊராட்சித் தலைவருமான சாவித்திரியும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். தற்போது இளையான்குடி ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முனியாண்டி உள்ளார்.

இங்கு அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்களின் ஆதரவும், திமுகவுக்கு 7 கவுன்சிலர்களின்ஆதரவும் உள்ளன. தற்போது அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் வே.முருகன் திமுகவுக்கு மாறியதால் இளையான்குடி ஒன்றியக் குழுவில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் அதிமுக, திமுக சமபலம் பெற்றுள்ளன. இதனிடையே மேலும் ஒரு அதிமுக கவுன்சிலர் திமுகவுக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்போதைய அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x