Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

செய்யாறில் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி 3-வது நாளாக அதிமுகவினர் சாலை மறியல்

செய்யாறு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி 3-வது நாளாக அதிமுக வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனுக்கு, நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தொகுதி வளர்ச்சியில் அலட்சியம் காட்டியது, அதிமுகவினரை அர வணைத்து செல்லாமல் செயல் பட்டது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

செய்யாறு நகர அதிமுகவினர் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி மற்றும் சாலை மறியல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. பின்னர், வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நடத்திய பேரணி மற்றும் சாலை மறியல் மாங்கால் கூட்டுச்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அனக்காவூர் ஒன்றிய அதிமுகவினர் தங்களது எதிர்ப்பை நேற்று வெளிப்படுத்தி உள்ளனர்.

அனக்காவூர் சாலையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு, ஊர்வலமாக மேல்மா கூட்டுச்சாலையை சென்றடைந்தனர். பின்னர் அவர்கள், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தூசி கே.மோகனை மாற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் எந்தொரு வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை. மாவட்டச் செயலாளர் மற்றும் எம்எல்ஏ என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு கட்சியினரை மதிக்காமல் செயல்பட்டார். அவரால் தொகுதி வளர்ச்சி பெறவில்லை. ஆனால், அனைத்து நிலைகளிலும் அவர் வளர்ச்சி அடைந்துவிட்டார். எனவே, அவரை மாற்றிவிட்டு, உண்மை யான தொண்டன் ஒருவனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் போட்டியிட்டால் அதிமுக தோல்வியை சந்திக்கும்” என்றனர்.

பின்னர், அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x