Published : 15 Mar 2021 12:00 AM
Last Updated : 15 Mar 2021 12:00 AM

காஞ்சிபுரம் அருகே கமல் கார் மீது தாக்கு, கண்ணாடி உடைந்தது: மர்ம நபர் கைது

காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்பிய மக்கள் நீதிமய்ய நிரந்தர தலைவர் கமல் கார் மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியதில் அவரது கார் கண்ணாடி உடைந்தது. தாக்கிய நபரை பிடித்து சரமாரியாக தாக்கிய மநீம தொண்டர்கள் அவரை போலீஸில் ஒப்படைத்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (14/3) மூன்றாம் கட்ட பிரச்சாரமாக காஞ்சிபுரத்தில் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசினார். இரவு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கமல்ஹாசனின் கார் காந்தி சாலை அருகே வந்தபோது ஒரு நபர் திடீரென கமல்ஹாசனின் கார் மீது தாக்கியுள்ளார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உடன் வந்த மநீம தொண்டர்கள் அந்த நபரைப்பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. மதுபோதையிலிருந்த அந்த நபரை உடனடியாக போலீஸார் தலையிட்டு தொண்டர்களிடமிருந்து மீட்டனர்.

பின்னர் அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கார் மீது நடத்திய தாக்குதலில் கமல்ஹாசன் காயம் இன்றி தப்பினார். பின்னர் வேறொரு காரில் அவர் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். கமல்ஹாசன் காரை தாக்கிய நபர் யார், எதற்காக தாக்கினார் என்பது தெரியவில்லை.

அவர் மதுபோதையில் இருந்ததால் தாக்குதலுக்கான நோக்கம் எதுவும் இருக்காது என்று போலீஸார் கருதுகின்றனர். இருந்தாலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது. அதேப்போன்று ரத்தம் வரும் அளவுக்கு கடுமையாக தாக்கியவர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x