Published : 14 Mar 2021 01:07 PM
Last Updated : 14 Mar 2021 01:07 PM

திருப்பரங்குன்றம் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்

சென்னை

மதிமுக, பாஜக, திமுக என பயணம் செய்த டாக்டர் சரவணன் தனக்கு திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு வழங்காமல் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் மீண்டும் பாஜகவுக்கு தாவினார். இன்று காலை பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன், மருத்துவரான இவர் ஆரம்ப காலத்தில் சில பொதுச் சேவைகளை தொகுதியில் செய்து வந்த நிலையில் 2013-ம் ஆண்டு மதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2014 மக்களவை தேர்தலில் மதிமுக, பாஜக, தேமுதிக, பாமக கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக தலைவர்களிடையே பரிச்சயம் ஏற்பட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு மதிமுகவிடம் பிணக்கு ஏற்பட்டு பாஜகவுக்கு தாவினார். பின்னர் 2016-ல் அங்கிருந்து திமுகவுக்கு தாவினார். அங்கு அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவருக்கு ஜெயலலிதா கைரேகை வைத்தது செல்லாது என வெற்றியை எதிர்த்து சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நடக்கும்போதே ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் 2019-ம் ஆண்டு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது.

அதில் சரவணனுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றிப்பெற்றார். தொகுதியில் வென்றாலும் திமுக நிர்வாகிகளிடையே மதிக்காமல் நடப்பது, ஒருங்கிணைப்பின்மை என பல புகார்கள் மேலிடத்திற்கு சென்றது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை, அங்குள்ள திமுக உட்கட்சி பிரச்சினை போன்றவை காரணமாக தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.

இதனால் சரவணன் அதிருப்தி அடைந்தார். ஆனாலும் திருமங்கலம் அல்லது மதுரை வடக்கு தொகுதி கேட்டார். அங்கும் ‘சீட்’ மறுக்கப்பட்டது, இது தனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது என தெரிவித்திருந்த சரவணன் இது சம்பந்தமாக கட்சித் தலைமையில் பேசவில்லை.

‘‘அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு நானும் ஓர் உதாரணம். எனக்கு ஏமாற்றம்தான். அதற்காக தவறான முடிவு எடுக்க மாட்டேன். அரசியலில் சோபிக்கமுடியாவிட்டாலும் மருத்துவத்தொழில் மூலம் ஏழைகளுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்’’ என பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் திடீரென முடிவெடுத்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இன்று காலை 11 மணி அளவில் பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் சரவணன் இணைந்தார். பாஜகவிலிருந்து திமுக வந்த அவர் மீண்டும் பாஜகவிற்கே சென்றுள்ளார். திமுகவில் நீடிப்பேன் என்கிற நிலையில் திடீரென பாஜகவிற்கு தாவியதன் மூலம் அவருக்கு விருதுநகர் போன்ற தொகுதியில் வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x