

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிறுபான்மை பிரிவுக்கு கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமையிடம் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் இதயதுல்லா, வாலாஜா அசன், சையது பாபு ஆகியோர் வலி யுறுத்தினர். மேலும், தென் மாவட்டத்துக்கு அவசியம் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இத்தொகுதியில் காங்கிரஸை சேர்ந்த வீரணன் அம்பலம் கடந்த 1980, 1984-ல் வெற்றி பெற்றுள்ளார். 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களில் முறையே 2 முறை காங்கிரஸ், ஒரு முறை தமாகா வேட்பாளராக போட்டியிட்ட ராஜமாணிக்கம் வெற்றி பெற்றார். இதுவரை திமுக ஒரு முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து 5 முறை வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்த காங்கிரசுக்கு 1991-க்குப் பிறகு தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இம்முறை சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க, கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, மேலூரைச் சேர்ந்த மாநில விவசாயப் பிரிவுச் செயலர் புரோஸ்கான் அல்லது வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.