

பெண்களுக்கிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், உரிய உயர் சிகிச்சை அளிக்க ஆவன செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
இதில்,
* பெண்களுக்கிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* பெண்களை அதிகமாகப் பாதிக்கக் கூடிய வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டு, உரிய உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட ஆவன செய்யப்படும்.
* தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட, பணிபுரியும் இடங்களில் சட்டப்படி அமைக்கப்பட வேண்டிய பாதுகாப்புக் குழுக்களை முறையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.