Last Updated : 13 Mar, 2021 11:13 AM

 

Published : 13 Mar 2021 11:13 AM
Last Updated : 13 Mar 2021 11:13 AM

'மரங்களின் நண்பர்' கருப்பையா உயிரிழப்பு

கோயில் வளாகம் முன்பு மரக்கன்றினை நடும் முதியவர் கருப்பையா.

அரியலூர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்த கருப்பையா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் கருப்பையா (85). இவர், கடந்த 15 ஆண்டுகளாக பெரம்பலூர், அரியலூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட அரசு அனைத்துத் துறை அலுவலக வளாகங்கள், பள்ளிகள், சாலையோரங்கள், கோயில்.வளாகம், சிமென்ட் ஆலைகள் என பல இடங்களில் பல வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து, உயிர் உண்டாக்கி வந்தார்.

கருப்பையா

அதற்காக தனது வீட்டின் தோட்டத்தில் வேம்பு, புங்கன், வாகை, புளியங்கன்று என பல வகையான மரக்கன்றுகளை 2 அடி முதல் 3 அடி வரை வளர்த்து, பின் இதுபோன்ற இடங்களில் நட்டுவைத்து பராமரித்து வந்தார். இதுவரை, சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து நட்டு வைத்துள்ளார். இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரிடம் பாராட்டும், பாராட்டுச்சான்றிதழும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கினார். தகவலறிந்த அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரும் பல்வேறு உதவிகளை செய்தனர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலர் மடக்கும் வசதி கொண்ட படுக்கையினை வாங்கி கொடுத்து உதவினர்.

இந்நிலையில், நேற்றிரவு (மார்ச் 12) அவரது உயிர் பிரிந்தது. இறுதி ஊர்வலம் அவரது கிராமமான கள்ளுரில் இன்று (மார்ச்.13) மதியத்துக்கு மேல் நடைபெறுகிறது. அவரது உயிரிழப்பு குறித்த தகவலறிந்த தன்னார்வலர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x