Published : 13 Mar 2021 10:14 AM
Last Updated : 13 Mar 2021 10:14 AM

மாலையில் வெளியாகிறது மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல்: திண்டுக்கல்லில் மீண்டும் பாலபாரதி போட்டி?

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இதில் கடந்த 3 முறை திண்டுக்கல்லில் சட்டப்பேரவை உறுப்பினராக வென்ற பாலபாரதி பெயர் மீண்டும் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணிக்கட்சிகள் பேச்சுவார்த்தையில் 12 தொகுதி கேட்ட நிலையில் நீண்ட இழுபறிக்குப்பின் கூட்டணிக்கட்சிகளில் கடைசியாக 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். அதேபோன்று தொகுதி பங்கீட்டிலும் சென்னையில் பெரம்பூர், திருவள்ளூரில் மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளைக் கேட்டனர்,

ஆனால் ஆர்.கே.நகர் அல்லது திருவொற்றியூரை திமுக தரவந்ததாக கூறப்பட்டது. இதனால் முதன்முறையாக சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை. சென்னை அல்லாத 6 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் 1.திருப்பரங்குன்றம், 2.கந்தவர்க்கோட்டை(தனி), 3. திண்டுக்கல், 4.கோவில்பட்டி, 5. அரூர் (தனி), 6. கீழ்வேளூர்(தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து அந்தந்த மாவட்டக்குழுக்கள் முடிவு அடிப்படையில் மாநிலக்குழுவில் வைத்து விவாதிக்கப்படுகிறது.

இதில் ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் பரிசீலிக்கப்படுகின்றனர்.

முக்கிய வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, டில்லிபாபு, கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 3 முறை போட்டியிட்டதால் கட்சி விதிப்படி வாய்ப்பு இல்லை என கடந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பாலபாரதியை மீண்டும் நிறுத்தலாம் என மார்க்சிஸ்ட் மேலிடம் யோசித்து வருவதாக தெரிகிறது.

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினராக பாலபாரதி 2001-ம் ஆண்டு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டார். அவரது எளிமையான வாழ்க்கை, சட்டப்பேரவையில் எடுத்து வைத்த வாதம் அரசியல் கட்சித்தலைவர்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து 2006-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தேர்வானார் பாலபாரதி. 2011-16 அந்த 5 ஆண்டுகாலம் அவர் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவிடமே நேரடியாக வாதிட்டு பல திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றார்.

ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பேரவை உறுப்பினர்கள் வரிசையில் பாலபாரதிக்கும் இடம் உண்டு. தனது தொகுதியில் மக்கள் பணியின் மூலம் கட்சித்தாண்டி மக்கள் செல்வாக்கைப் பெற்றார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக அமைச்சர் சீனிவாசன் போட்டியிடுவதால் மக்கள் செல்வாக்கு பெற்ற பாலபாரதி நிறுத்தப்பட்டால் போட்டி கடுமையாக இருக்கும்.

பாலபாரதி வெல்ல அதிகம் வாய்ப்பு என அம்மாவட்ட கட்சி நிர்வாகிகள் மேலிடத்திற்கு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு கட்சி விதிப்படி 4 வது முறை போட்டியிட பாலபாரதிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை விதியை சற்று தளர்த்தி வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. இதேப்போன்று முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பெ.சண்முகம் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர் பட்டியல் மாலையில் வர உள்ள நிலையில் பரிசீலனையில் உள்ள கட்சி நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படும் கட்சியினர் தொகுதி வாரியாக வருமாறு:

1. திருப்பரங்குன்றம் - எஸ்.கே.பொண்ணுத்தாய் / மதுக்கூர் ராமலிங்கம்

2.கந்தர்வக்கோட்டை தனி - எம்.சின்னதுரை / கவிவர்மன்

3. திண்டுக்கல் - கே.பாலபாரதி / என்.பாண்டி / சச்சிதானந்தம்

4. கோவில்பட்டி - கே.கனகராஜ் / மல்லிகா / அர்ச்சுனன்

5. அரூர் தனி - பெ.சண்முகம் / பி.டில்லிபாபு / குமார்

6. கீழ்வேளூர் தனி - நாகைமாலி / வி.மாரிமுத்து

இந்தப்பட்டியல் உறுதியான ஒன்று அல்ல மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலுக்கு பரிசீலிக்கப்படும் பெயர்களே இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட்கட்சி பட்டியல் மாலை அதிகாரபூர்வமாக வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x