Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை: உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவிபெறும் எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து 2 மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டைப் போல மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இந்த வழக்கு கடந்த2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான (இடபுள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தரப்பில்குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி கண்டனம்

அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அந்த இடஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்காத நிலையில், எப்படி அந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்குநேற்று மீண்டும் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘எம்.டெக். படிப்புக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எந்தமாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு விரோதமாக அந்த இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்த முடியாது. அவ்வாறு செயல்படவும் கூடாது.ஒருவேளை இந்த விஷயத்தில் மாநில அரசின் முடிவுக்கு விரோதமாக செயல்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிராகமாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

49.5% இட ஒதுக்கீடு

பின்னர், இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆண்டுகளில் பின்பற்றிய மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x