

வேட்புமனுக்களை பெறும்போது தேர்தல் ஆணையம் மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
இது தொடர்பாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் வயது, முகவரி, வாக்கு இடம்பெற்றுள்ள தொகுதியின் பெயர், எண், வாக்காளர் பட்டியலில் உள்ள எண் மற்றும் வருமானம், சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வித்தகுதி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பி-க்களின் வேட்புமனுக்கள் போதிய விவரங்களுடன் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. அந்த வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையமும் பரிசீலித்து ஏற்றுக் கொண்டுள்ளது.
நீலகிரி எம்.பி. ராஜா மற்றும் பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே முறையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை முறையாக தாக்கல் செய்யாத எம்.பி.-க்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல வேட்புமனுக்கள் அனைத்து விவரங்களுடனும் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும்நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில், “வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களில் போட்டியிடும் தொகுதி எண்களைக்கூட சரியாக குறிப்பிடுவதில்லை” என குற்றம்சாட்டப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், “வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் எந்த குறைபாடுகளும் இல்லை” என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “வேட்பு மனுக்களை பெறும்போது தேர்தல் ஆணையம் மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்” என அறிவுறுத்தினர். பின்னர் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.