Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

வாக்களிக்க பணம் அளிக்கும் போது தான் ஊழல், லஞ்சத்துக்கான விதை ஊன்றப்படுகிறது: கிருஷ்ணகிரி தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

வாக்களிக்க பணம் கொடுக்கும் போது தான், ஊழல், லஞ்சத்துக் கான விதை ஊன்றப்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி நிரந்தரி, பர்கூர் கருணாகரன், வேப்பனப்பள்ளி சக்திவேல், ஓசூர் கீதாலட்சுமி, தளி மேரி செல்வராணி, ஊத்தங்கரை வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:

அரசியலை லாபம் ஈட்டும் தொழி லாக தற்போது உள்ள கட்சிகள் மாற்றி உள்ளனர். இதனை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். நாங்கள் வாக்களிக்க பணம் தர மாட்டோம். ஊழல், லஞ்சத்துக்கான விதையே வாக்களிக்க பணம் கொடுக்கும் போது தான் ஊன்றப்படுகிறது. ஒரு முறை 5 ஆண்டுகளை எங்களை நம்பி ஒப்படையுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

ஓசூரில் சீமான் பேசும்போது, ‘‘நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில், தமிழக பகுதியில் உள்ள காவிரியில் இருந்து எங்கெல்லாம் தண்ணீர் வேறு பகுதிக்குச் செல்கிறதோ, அதெல்லாம் தடுத்து நிறுத்தப்படும். இங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் காவிரி தண்ணீரை தடுத்து பெரிய குழாய் மூலமாக மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படும். நிலத்தடி நீரை தனியார் எடுத்து விற்பனை செய்வது தடை செய்யப்படும். அனைவருக்கும் குடிநீர், கல்வி இலவசம், அனைவருக்கும் மருத்துவம் இலவசம். நிலம் மற்றும் வளத்தை பயன்படுத்தி படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும்,’’ என்றார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தில்குமார், கீர்த்தனா, ரமேஷ், தமிழழகன், கலைச்செல்வி ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

இவர்களை ஆதரித்து நேற்று தருமபுரி நகரில் 4 ரோடு, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘‘ஒருகாலத்தில் அரசியல், மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக இருந்தது. ஆனால் தற்போது அது லாபம் பார்க்கும் தொழிலாக மாறியுள்ளது. இதையெல்லாம் ஒழித்து தூய ஆட்சியை தரவே நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளது,’’ என்றார்.கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x