

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டை வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கரோனா தொற்று பரவல் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டதால், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், தொற்று பாதிக்கப்பட்ட வயது வந்தவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 ரூபாயும், சிறாருக்கு நாளொன்றுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் வர்த்தகப் பிரிவு செயலாளர் தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை இன்று (மார்ச் 12) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஏற்கெனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்வதற்கான காரணங்களை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.