

நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக 214 தொகுதிகளில் வெற்றிபெறும். 20 தொகுதி வேண்டுமானால் சிந்தல், சிதறலில் போகலாம், என திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்த அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இரண்டாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இவர் இன்று பகல் 2 மணிக்குமேல் தனது வேட்புமனுவை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரும் திண்டுக்கல் தொகுதி தேர்தல் அலுவலருமான காசிசெல்வியிடம் தாக்கல்செய்தார்.
இவருடன் முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் ஆகிய இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்தமுறை வாங்கிய வாக்குகளை விட நான்கு மடங்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தஅளவிற்கு தொகுதியில் மக்களுக்குப் பணிகள் செய்துள்ளேன். அரசு கொண்டுவந்த நல்லதிட்டங்களும் வெற்றியை உறுதிசெய்யும். அதிமுக 214 தொகுதிகளில் வெற்றிபெறும். ஒரு 20 தொகுதிகள் வேண்டுமானால் சிந்தல், சிதறலில் போகலாம், என்றார்.