Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு: நள்ளிரவில் லிங்கோத்பவ மூர்த்திக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே யார் பெரியவர் எனஏற்பட்ட போட்டியால், ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சிக் கொடுத்தார் சிவபெருமான். அதன் மூலம் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் அகந்தை அழிந்தது. அந்த நாள், மாசி மாதம் தேய்பிறையில் சதுர்த்தசி திதியில், திருவண்ணாமலை திருத்தலத்தில் நிகழ்ந்தது என்றும், இதுவே ‘சிவராத்திரி’ என்று புராணங்கள் கூறுகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நேற்று அதிகாலைதொடங்கியது. வண்ணக் கோலங்கள், மலர்கள் மற்றும் பழங்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும், நேற்றிரவு 7.30 மணி, 11.30 மணி, இன்று (12-ம் தேதி) அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மூலவர் கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x