Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

பெற்றோரை கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்துவோம்: தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதியேற்பு

சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற அனைவரையும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்துவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் முறையாக 20 விநாடிகள் சோப்பு உபயோகித்து கை கழுவுதல் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அதிகாரி டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, முறையாக சோப்பு உபயோகித்து கைகழுவுதல், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், அதை நிறைவேற்றுவதில் மாணவர்களின் பங்கு, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகை பிரித்து அளித்தலின் அவசியம், தூய்மைக்கான மதிப்பீடு - 2021 குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில், வரும் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தில் வாக்குரிமை பெற்றுள்ள அனைவரையும் வாக்களிக்க வைத்து, ஜனநாயகக் கடமையை நிலைநாட்டுவோம் என்று மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஐசிடபிள்யூஓ தொண்டு நிறுவன ஒத்துழைப்புடன் மாணவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x