Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

கும்மிடிப்பூண்டியில் வேறு தொகுதியை சேர்ந்தவரை பாமக வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு அதிமுக தலைமை ஒதுக்கியுள்ள 23 தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட, கடந்த 2016 தேர்தலில் பாமக வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியை தழுவிய பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில துணை தலைவர் துரை.ஜெயவேலு உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாமகவின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. அதில், கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளராக, பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பொன்னேரி தொகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், பாமக தலைமை கும்மிடிப்பூண்டி தொகுதியை சேர்ந்தவரை பாமக வேட்பாளராக அறிவிக்காமல், வேறு தொகுதியை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக இளைஞரணி மாநில துணை பொதுச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 'பாமக வேட்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதியை சேர்ந்தவரை அறிவிக்க வேண்டும்' என முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x