Published : 11 Mar 2021 08:48 PM
Last Updated : 11 Mar 2021 08:48 PM

கேட்டது 12; கிடைத்தது 6: தமாகா போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு: இரட்டை இலை சின்னத்தில் போட்டி

தமாகா குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். அதற்கு கவுரவமான தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து வாசன் கூறுகையில், "அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதி என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். திருவிக நகர், பட்டுக்கோட்டை, லால்குடி, ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. எங்கள் கட்சியின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்" என்றார். லால்குடி தொகுதியில் ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக ராஜராம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத் தொகுதி தற்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமாகாவின் பயணம்..
2016- சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை அடைந்தப்பின் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறினார் வாசன். காங்கிரஸ், தமாகா ஒரே கூட்டணியில் இருக்க முடியாத காரணத்தால் அதிமுகவுக்கு நெருக்கமானார். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவுக்கு நல்ல நண்பனாக சில நேரம் இடிந்துரைத்தாலும் பல நேரம் அதிமுக அரசுக்கு பக்கபலமாக இருந்தார். இதனால், அதிமுகவில் மாநிலங்களவை சீட் திடீரென வாசனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் எளிதாக இடங்களை கேட்டுப்பெறலாம் என்று ஜி.கே.வாசன் நினைத்திருந்த நிலையில் அவர் கட்சி கேட்ட 12 தொகுதிகளை வழங்க அதிமுக மறுத்தது. தற்போது 6 சீட்டுகளை தமாகா ஏற்றுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x