Last Updated : 11 Mar, 2021 05:33 PM

 

Published : 11 Mar 2021 05:33 PM
Last Updated : 11 Mar 2021 05:33 PM

அமைச்சருக்கு சீட் மறுப்பு: அமமுக செல்வாக்கால் 40 கிராமங்களில் அதிமுகவிற்கு சிக்கல்

சிவகங்கை தொகுதியில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு சீட் மறுப்பு, அமமுக செல்வாக்கால் 40 கிராமங்களில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே தமராக்கியில் அம்பலமாக உள்ள ஜி.பாஸ்கரனுக்கு தமராக்கி மட்டுமின்றி, அக்கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.

இதனால் அவர் கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு தரப்பினர் ஆதரவோடு ஒன்றியக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு ஒன்றியக்குழுத் தலைவரானார்.

மேலும் பாஸ்கரனின் சொந்த கிராமமான தமராக்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காங்கிரஸ் வலுவாக இருந்தது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஸ்கரனுக்கு அதிமுகவில் சீட்டு கொடுத்ததும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலானோர் அவருக்காக அதிமுகவில் இணைந்து பணியாற்றினர்.

மேலும் அப்பகுதியில் பாஸ்கரனின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சியில் இருந்தபோதிலும், பாஸ்கரனுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்தனர். இதனால் அப்பகுதியில் அவருக்கு, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட பல ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். அதுவே அவர் வெற்றி பெற உதவியாக இருந்தது.

ஆனால் இந்தத் தேர்தலில் பாஸ்கரனுக்கு சீட் கொடுக்காததைக் கண்டித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த பலர் இன்று (மார்ச் 11) சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘ எங்களது அம்பலத்தை (பாஸ்கரன்) தவிர வேறுயார் நின்றாலும் தோற்கடிப்போம்,’ என்று தெரிவித்தனர்.

அதேபோல் சிவகங்கை தொகுதிக்குட்பட்ட சிவகங்கை வடக்கு ஒன்றியம், கல்லல் ஒன்றியம், காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் அமமுக வலுவாக உள்ளது. அவர்களும் தேர்தலில் களம் காண்கின்றனர். ஜி.பாஸ்கரனுக்கு சீட் மறுப்பு, அமமுக செல்வாக்கால் 40 கிராமங்களில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பாரோ செந்தில்நாதன்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x