Published : 11 Mar 2021 04:58 PM
Last Updated : 11 Mar 2021 04:58 PM

நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் கரோனா தொற்றை பரப்புபவர்களுக்கு 6 மாத சிறை: ஆட்சியர் எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா: கோப்புப்படம்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியாமல் நோயை பரப்புபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று (மார்ச் 11) கூறியதாவது:

"நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதற்காக, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 20 நபர்கள் என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு, பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் அனைவரும் முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முகக்கவசம் அணியாத நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

முகக்கவசம் அணியாமல் நோயை பரப்புபவர்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொது தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் மூலம் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 ஆயிரம் நபர்கள் வாக்காளர்களாக உள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடிடையாக சென்று தபால் மூலம் வாக்களிக்க 12டி படிவங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது வரை 2,314 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.

மேலும், மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 37 மையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் கரோனா தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 28 ஆயிரத்து 720 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள முன்வர வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x