Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

ஒதுங்கிக்கொண்ட ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்: தந்தையின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்ய முடிவு

ஜெயபிரதீப்

கம்பம்

கம்பத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிடுவார் எனத் தகவல் பரவிய நிலையில், வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை. வாரிசு அரசியல் உள்ளிட்ட எதிர்விளைவு ஏற்படும் என்பதால் இவர் விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அரசியலில் நேரடி தொடர்பின்றி ஆன்மிகம், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். தேர்தலின்போது தந்தைக்கு ஆதரவாக களப்பணிகளில் ஈடுபடுவார். இந்நிலையில், இவரும் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் பரவியது. கம்பத்தில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் தெரிவித்து வந்தனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமையிடம் விருப்ப மனுக்களை அளித்தனர். ஆனால் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதால் கம்பம் தொகுதி சவாலாக உள்ளது. இங்கு இஸ்லாமியர் வாக்குகள் அதிகமாக உள்ளன. மேலும் சமீபகாலமாக சீர்மரபினர் உத்தமபாளையம், அம்மாபட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் வன்னியர் உள் இடஒதுக்கீட்டினால் அதிருப்தியில் உள்ளனர். இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று அதிமுக கணித்துள்ளது. அதோடு வாரிசு அரசியல் புகாரும் எழலாம் என்பதால் ஜெயபிரதீப் ஒதுங்கிக்கொண்டதாகத் தெரிகிறது.

கட்சியினர் கூறுகையில், தந்தைக்காக ஜெயபிரதீப் தீவிரமாக களப்பணியாற்றுவார். ஆர்வமிகுதியால் இவருக்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கலாம். மற்றபடி தேர்தலில் அவருக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x