Published : 10 Mar 2021 09:40 PM
Last Updated : 10 Mar 2021 09:40 PM

10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக: பென்னாகரத்தில் ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு போட்டி

10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது. பென்னாகரத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு, கட்சியின் வழக்கறிஞர் மற்றும் சமூகநீதி பேரவைத் தலைவர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுத்தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 10) வெளியானது.

இந்தத் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில், அதிமுக சார்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தொகுதிகள் முடிவான நிலையில், பாமக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த பிரமுகர்களான ஜி.கே.மணி பென்னாகரத்திலும், கே.பாலு ஜெயங்கொண்டான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஆத்தூரில் திண்டுக்கல் மாவட்டம்) திலகபாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் ஆறுமுகம், தருமபுரியில் வெங்கடேசன், ஆற்காடு தொகுதியில் இளவழகன், திருப்பத்தூர் ராஜா, சேலம் மேற்கு தொகுதியில் அருள், செஞ்சியில் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.

விரைவில் அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x