Published : 10 Mar 2021 08:06 PM
Last Updated : 10 Mar 2021 08:06 PM

சென்னையில் போலீஸார் வாகன சோதனை: 12 கிலோ தங்கத்துடன் சிக்கிய ஆட்டோ

சென்னை அண்ணா நகரில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 12 கிலோ தங்கம் சிக்கியது. நகைக்கடை ஊழியர்கள் கொண்டுவந்த நகைக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிப்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்லக்கூடாது, அதிக பணம் கொண்டு சென்று பிடிபட்டால் உரிய ஆவணம் இல்லாவிட்டால் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும். தங்க நகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்றால் உரிய ஆவணம் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகே நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி, சோதனையிட்டனர்.

ஆட்டோவை சோதித்தபோது ஆட்டோவில் 12 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக அதைப் பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் ஆட்டோவில் வந்த இரண்டு நபர்களையும் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சௌகார்பேட்டையைச் சேர்ந்த சந்திர பிரகாஷ், சரவணன் என்பதும், நகைகளை ஆர்டர் பெற்று விற்பனை செய்து வருவதாகவும், ஈரோட்டில் உள்ள ஒரு கடைக்கு நகைகளைக் கொண்டு சென்றபோது கடைசி நேரத்தில் நகைக் கடை உரிமையாளர் நகை வேண்டாம் என ஆர்டரை கேன்சல் செய்துவிட்டதால், மீண்டும் சௌகார்பேட்டைக்குத் திரும்ப எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

நகைக்கான ஆவணங்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கேட்டபோது உரிய ஆவணங்களை அவர்கள் இருவரும் காண்பித்தனர். இதனையடுத்து இருவரிடமும் நகைகளை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x