Published : 10 Mar 2021 04:15 PM
Last Updated : 10 Mar 2021 04:15 PM

அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.

அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 10) வெளியிட்ட அறிவிப்பில், "அமமுகவுக்கும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு தமிழ்நாட்டில் திருவிடைமருதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதேபோல், அமமுகவுக்கும் மக்களரசு கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, மக்களரசு கட்சிக்கு தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x