Published : 10 Mar 2021 12:54 PM
Last Updated : 10 Mar 2021 12:54 PM

தேமுதிக விலகலால் பாஜக அதிக இடங்களில் போட்டியிடுகிறதா?- எல்.முருகன் பதில்

சென்னை

தேமுதிக விலகலால் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தேமுதிக- அதிமுக இடையே நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காததை அடுத்து, அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியுள்ளது.

இதற்கிடையே பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்தலில் வெற்றி பெறுவீர்களா?

எங்கள் கூட்டணி பலமிக்க கூட்டணியாக உள்ளது. எந்த நேரத்திலும் எங்கள் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு குறையாது என்பது என்னுடைய நம்பிக்கை. நாங்கள் மிகப் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால், பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதா?

அதுகுறித்து தேசியத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதைப் பின்பற்றுவோம். இன்னும் அதுபற்றி எங்களுக்குத் தகவல் வரவில்லை.

கூட்டணியில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் பாஜகவுக்கும் பாமகவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?

எந்த ஒரு சிக்கலும் இல்லை. எல்லாமே சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

எந்தெந்தத் தொகுதிகள் உங்களுக்கு வழங்கப்பட உள்ளன?

கட்சி ரீதியாகப் பேசப்படுவதை பத்திரிகையாளர்களிடம் சொல்ல முடியாது.

வேட்புமனு தாக்கலைத் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லையே?

கூடிய விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x