Published : 10 Mar 2021 10:31 AM
Last Updated : 10 Mar 2021 10:31 AM

பயிர்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சுற்றுச்சூழலை பாதிக்கும், பயிர்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.ஆர்.பாலு நேற்று (மார்ச் 9), மக்களவையில், சுற்றுச்சூழலை பாதிக்கும், பயிர்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்த இயலாத நிலையில், பயிர்க் கழிவுகள் எரிப்பினைத் தடுக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும், வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து, உயிரி வாயு மற்றும் எத்தனால் முதலிய பொருட்களைத் தயாரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? எனவும், விரிவான கேள்வியை, மக்களவையில், டி.ஆர்.பாலு எழுப்பினார்.

மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இது தொடர்பாக மக்களவையில் அளித்த பதில்:

"சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் நிலத்தின் அளவு குறைவாக இருப்பதாலும், விவசாய இயந்திரங்களின் விலைகளைக் கருத்தில் கொண்டும், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில், பயிர்க் கழிவுகள் எரிப்பினைத் தடுக்க, தேவையான விவசாய இயந்திரங்களை வாடகைக்கு அளிக்கும், சிறப்புத் திட்டத்தினை மத்திய விவசாயத் துறை மேற்கொண்டுள்ளது.

விவசாய நிலங்களிலிருந்து வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூலம் வைக்கோல் போன்ற பொருள்களிலிருந்து, உயிரி வாயு தயாரிக்கும் முயற்சிகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுத் துறையில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக, சுற்றுச்சூழலை பாதிக்காத, உயிரி வாயுக்களை, வைக்கோல் போன்ற பயிர்க் கழிவுகளிலிருந்து தயாரிக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன".

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x