Last Updated : 09 Mar, 2021 08:37 PM

 

Published : 09 Mar 2021 08:37 PM
Last Updated : 09 Mar 2021 08:37 PM

தேர்தல் களத்தில் இனி  திமுகவுக்கும் எங்களுக்குமே போட்டி: அதிமுகவிலிருந்து விலகியதை வரவேற்கும் மதுரை தேமுதிகவினர்

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சில், திமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்தது.

அதிமுகவில் தேமுதிகவுடன் 3 கட்டத்துக்கும் மேலான கூட்டணி பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. கூட்டணியை முறித்துக்கொண்டு, விலகியது. தனித்துப் போட்டியிடுவது என, திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "தமிழகத்தில் திமுக, அதிமுகவை போன்ற வளர்ந்த மாநிலக் கட்சிகளில் நாங்களும் இருக்கிறோம். எங்களுக்கென மாநிலம் முழுவதும் பரவலான வாங்கு வங்கி உள்ளது.

அதிமுக கூட்டணிப் பேச்சு எனக் கூறி இழுத்தடித்து ஏமாற்றிவிட்டது. ஏற்கெனவே அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை எங்களைப் போன்ற நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விரும்பவில்லை.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் பாஜக மீது ஏழை, நடுத்தர மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் கூட்டணியில் இருந்ததால் வேறு வழியின்றி அதிமுகவில் தொடர்ந்தோம்.

எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். அவர்கள் மதிக்கவில்லை. எப்போதுமே எங்கள் தலைவர் தன்மானத்தை விட்டுத்தரமாட்டார். அவரது உடல் நிலை பாதித்து இருந்தாலும், அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

வேறு எந்த கூட்டணிக்கும் போவதாக இல்லை. 234 தொகுதியிலும் களமிறங்க தயாராகிவிட்டோம். ஒவ்வொரு தொகுதியிலும் 7 முதல் 12 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளோம். மனுக்கள் பரிசீலிக்கும் பணி தொடங்கியது. ஓரிரு நாளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம்.

நாங்களும் எதற்கும் தயார் என்ற நிலையில் தான் தேர்தல் பணி செய்கிறோம். அதிமுகவுக்கு 2006 நிலையே 2021லும் நடக்க போகிறது. தேர்தலுக்கு பின்பு அதிமுக உணரும். 100 சதவீதம் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோம். அவர்களை எதிர்ப்பதுடன் களத்தில் திமுக-தேமுதிகவுக்கே சரியான போட்டியாக அமையும்.

கட்டாயம் நாங்கள் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம். அதிமுக, திமுகவுக்கு எதிரான எங்களது பிரச்சாரங்கள் கேப்டனை முதல்வராக்குவோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x